ஊரடங்கால் சைக்கிளில் உலகைச் சுற்றும் வாலிபருக்கு சிக்கல்

ஊரடங்கால் சைக்கிளில் உலகைச் சுற்றும் வாலிபருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-05-06 22:37 GMT
கொனாக்ரி, 

தென் கொரியா நாட்டைச் சேர்ந்த 33 வயது ரேமண்ட் லீ என்ற வாலிபர், கடந்த இரண்டு வருடங்களாக சைக்கிளில் உலகைச் சுற்றி வருகிறார். இவர், அண்மையில் ஐரோப்பாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஆப்பிரிக்க கண்டத்துக்கு சென்றார்.

சகாரா பாலைவனம் வழியாக கினியா நாட்டின் தலைநகர் கொனாக்ரி சென்றடைந்தார். அப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் அவருக்கு பெரும் சிக்கல் முளைத்தது.

பக்கத்து நாடுகளுக்கு செல்லும் எல்லா எல்லைகளும் மூடப்பட்டு கிடந்தன. இதனால் அவரால் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாத சூழல் உருவானது.

இதுதவிர, லீ தங்குவதற்கு அந்நகரில் எந்த ஓட்டல்களும் இடமளிக்கவில்லை. 7, 8 ஓட்டல்கள் ஏறி, இறங்கியும் அவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. எனினும், தனது முயற்சியை அவர் கைவிடவில்லை. அப்போது அவருக்கு உதவுவதாக கூறி ஒருவர் வந்தார்.

50 யூரோக்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம்) கட்டண அடிப்படையில் ஒரு மாதத்துக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து பணத்தையும் வாங்கிக் கொண்டார்.

ஆனால், அடுத்த வினாடியே, அந்த நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டார். இதனால் லீ மேலும் விரக்தி அடைந்தார்.

இதுபற்றி லீ செல்போன் மூலம் பேசுகையில், “ஆசிய கண்டத்தை சேர்ந்தவன் என்பதால் எனக்கு ஓட்டல்களில் அறை தர மறுக்கிறார்கள். இதுபோன்ற இனவெறியை நான் சந்திப்பது இதுதான் முதல்முறை. இங்கு மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறேன்” என்று மனம் உடைகிறார்.

கினியாவில் பரிதவிக்கும் ரேமண்ட் லீக்கு தூதரக உதவி கிடைத்தால் மட்டுமே பாதுகாப்பான தங்குமிடமும், உணவும் சாத்தியம்.

மேலும் செய்திகள்