இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

Update: 2020-05-08 00:30 GMT
ஜகார்த்தா, 

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அந்த நாடு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தோனேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தின் தெங்கரா பாரத் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 133 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதே போல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்தும் தகவல்கள் இல்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மலுகு மாகாணத்தின் தலைநகர் அம்போனில் 6.8 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 36 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்