கென்யாவில் வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலி
கென்யாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைரோபி,
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, சோமாலியா, உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.
இதனால் இந்த நாடுகளின் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
கனமழை, வெள்ளம் காரணமாக பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. கென்யாவில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் ருவாண்டாவில் 55 பேரும், சோமாலியாவில் 16 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.