கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள்: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் அறிவுறுத்தல்
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 45,898-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் 985- பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் கண்டுபிடிக்கும் வரையிலும் மக்கள் அதனுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் கூறுகையில், கொரோனாவால் நாம் இரட்டை சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.
ஒருபக்கம் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மற்றொரு பக்கம் ஊரடங்கை தளர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏனெனில், மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். பாகிஸ்தானில் சுமார் 2.5 கோடி தனக்கூலி தொழிலாளர்கள் உள்ளனர்.
எனவே, ஊரடங்கு நீக்கப்படாவிட்டால் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் வாடுவர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வரை நாம் அதனுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். வளங்கள் பொருந்திய மேலை நாடுகளே இந்த சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன” என்றார்.