ரமலான் பண்டிகை; ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 3 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 3 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவித்து உள்ளனர்.

Update: 2020-05-24 01:52 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக உள்நாட்டு படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு சமாதானம், நல்லிணக்க செயல்முறையை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியது.  தலீபான் பயங்கரவாதிகளுடனான போரை கட்டுக்குள் கொண்டு வர அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ரமலான் மாதத்தில், முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்வார்கள்.  ரமலான் மாதஇறுதியில், பிறை தெரிந்தவுடன் அதற்கு அடுத்த நாள் ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 3 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவித்து உள்ளனர்.  இதுபற்றி அந்த பயங்கரவாத குழு வெளியிட்டு உள்ள செய்தியில், ரமலானை நாட்டு மக்கள் திருப்தியுடன் கொண்டாடுவதற்காக, ரமலானின் 3 நாட்களுக்கு, நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து முஜாகிதீன்களுக்கும் தலைமை, அறிவுறுத்தல் அல்லது உத்தரவு வழங்கியுள்ளது.

இந்த 3 நாட்களுக்கும் எதிரிகள் எந்த பகுதியில் இருப்பினும் தாக்குதல் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்