தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த சீனா முயற்சி: ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது

தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தயாராகும் சீனாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது.

Update: 2020-05-24 22:15 GMT
ஹாங்காங், 

சீனாவின் நேரடி கட்டுபாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்தன.

இந்தச் சூழலில், ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.

சுமார் 6 மாதம் நீடித்த இந்தப் போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டங்கள், சீன ஆளுகைக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.

இந்த போராட்டங்களை இங்கிலாந்து தூண்டிவிடுவதாக சீனா பல முறை குற்றம் சாட்டியது. மேலும், போராட்டங்களின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாதத்துடன் சீன அரசு ஒப்பிட்டுப் பேசியது.

இந்த நிலையில் ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீனா நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த புதிய மசோதாவில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஹாங்காங்கின் சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள மூத்த அரசியல்வாதிகள் 200 பேர் சீனாவின் நடவடிக்கையை கண்டித்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் அவர்கள் சீனாவின் இந்த நடவடிக்கை “ஹாங்காங்கின் சுயாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான விரிவான தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தயாராகும் சீனாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் நேற்று போராட்டம் வெடித்தது. ஹாங்காங்கின் முக்கிய வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல இடங்களில் ஜனநாயக ஆர்வலர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். அவர்கள் சீனாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

மேலும் சீன அரசை கண்டித்தும், ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிந்திருந்தனர்.

எனினும் சமூக இடைவெளியை மறந்தும், அரசின் உத்தரவை மீறியும் பொது இடத்தில் மக்கள் கூட்டமாக கூடியதால் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து பேரணியாக சென்றனர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர்.

மேலும் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்தனர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் பலர் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தனர். அவர்களை சக போராட்டக்காரர்கள் தூக்கி சென்று போலீசாரிடம் இருந்து காப்பாற்றினர்.

மேலும் செய்திகள்