ஆப்கானிஸ்தானில் கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு; பாதுகாவலர் பலி

ஆப்கானிஸ்தானில் கவர்னருடன் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

Update: 2020-06-21 10:42 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஒன்றுமறியாத பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.  அரசுக்கு கடும் சவாலாக உள்ள அவர்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தலீபான் தலைவர்களுடன் பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், இதில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.  தாக்குதல் தொடருகிறது.  ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் கவர்னராக இருப்பவர் ஹபீஸ் அப்துல் கய்யாம்.  அந்நாட்டின் தலைநகர் காபூலில் இருந்து கிழக்கே மஹிபார் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ கய்யாம் சென்று கொண்டு இருந்துள்ளார்.

அவரது வாகனம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 7 மணியளவில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.  இந்த சம்பவத்தில் கவர்னருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.  எனினும் அவரது பாதுகாப்பு வாகனத்தில் இருந்த பாதுகாவலர் ஒருவர் பலியானார்.  மற்றொருவர் காயமடைந்து உள்ளார்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்