"வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" - இலங்கை அரசு

பிராந்திய ரீதியிலான வெளியுறவு கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-27 12:48 GMT
கொழும்பு,

இந்தியா, சீனா இடையே உரசல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகள் உடனான உறவை சீனா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த வகையில் இலங்கையிலும் சீனாவின் ஆதிக்கம் அதிக​ரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நி​லையில், இந்தியாவின்   பாதுகாப்பு நலன்களுக்கு மதிப்பளிக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும், மற்றொரு நாட்டுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதித்தால் இலங்கை அனுமதிக்காது என்றும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக அத்தகைய நிலையை இலங்கை ஒருபோதும் எடுக்காது என ஜெயநாத் கொலம்பேஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹம்பந்தோட்டா துறைமுக பணிகளை மேற்கொள்ள இந்தியா மறுத்ததால் தான் சீன நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 

அங்கு வணிகரீதியான பணிகள் தான் நடைபெறுவதாகவும் ராணுவ ரீதியிலான பணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.  கொழும்பு கிழக்கு முனைய பணிகள் தொடர்பாக  இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். ராணுவ பின்புலம் உள்ள ஒருவர், இலங்கை வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்