ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-09-05 00:51 GMT
மனாமா,

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது.

இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், தொலைதொடர்பு மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை தொடங்கியுள்ளன. அந்த வகையில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இஸ்ரேலின் முதல் விமானம் சென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் விமானம் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து சவுதி அரேபியா வான் பரப்பு வழியாக இஸ்ரேல் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றது.

இந்த நிலையில் இஸ்ரேல் விமானங்கள் பக்ரைன் நாட்டின் வான் பரப்பை பயன்படுத்துவதற்கு அந்த நாடு அனுமதி அளிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்திருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த கோரிக்கையை பக்ரைன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி இனி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் நாட்டின் விமானங்கள் பக்ரைன் வான் பரப்பை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்