அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் தொடரும் வன்முறை; ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர்.

Update: 2020-10-08 00:15 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வந்தாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கபீஸா மாகாணத்தின் தாகாப் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் அந்த வழியாக சென்ற கார் சிக்கி வெடித்து சிதறியது. இதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதைப்போல் தெற்குப் பகுதியில் உள்ள ஹெல்மெண்ட் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி முன்பு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்தனர். இதில் ராணுவ வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். முன்னதாக காந்தஹார் மாகாணத்தில் எல்லை பாதுகாப்பு படையின் சோதனைச்சாவடி அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் செய்திகள்