ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு உயர்வு; முக கவசங்களை அணிவது கட்டாயம்
ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளால் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
மாஸ்கோ,
ரஷ்யாவில் தொடக்கத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது குறைந்த அளவில் கொரோனா பாதிப்புகள் இருந்து வந்தன. இதன்பின்னர் இந்த எண்ணிக்கை அதிரடியாக உயர தொடங்கியது.
இதனால் உலகில் அதிக கொரோனா பாதிப்புகள் கொண்ட நாடுகளின் வரிசையில் 15.47 லட்சம் பேருடன் 4வது இடத்தில் உள்ளது. இதேபோன்று அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 26,589 ஆக உள்ளது.
தொடர்ந்து நாள்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சம் அடைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, அந்நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு வகுத்துள்ள விதிகளின்படி, மக்கள் நெருக்கடி மிக்க இடங்கள், பொது போக்குவரத்து, டாக்சிகளை பயன்படுத்தும்பொழுது மற்றும் லிப்ட்களில் செல்வோர் முக கவசங்களை அணிய வேண்டும்.
இதேபோன்று இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை பொது நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கபேக்கள் மற்றும் உணவு விடுதிகளை மூடி வைத்திருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.