தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது; ’இது மிகவும் நல்ல செய்தி’ - டொனால்டு டிரம்ப் டுவீட்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-09 18:17 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். 

ஜோ பைடன் வெற்றிபெற்றபோதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் தற்போது வரை வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்த பின்னர் ஜோ பைடன் 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தான் அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையில், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி இன்று வெளியானது. 

அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.  தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக ஃபிப்சர் நிறுவனம் அறிவித்த சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது. இது மிகவும் நல்ல செய்தி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்