பின்லாந்து அருகே பலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்; 400 பேர் சிக்கி தவிப்பு
பின்லாந்துக்கு உட்பட்ட ஆலண்ட் தீவில் பலத்த காற்றால் தரை தட்டி நின்ற பயணிகள் கப்பலால் 400க்கும் கூடுதலானோர் சிக்கி தவித்தனர்.
ஸ்டாக்ஹோம்,
பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. அதில், 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகள் இருந்துள்ளனர்.
கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் பால்டிக் கடல் வழியே சென்றபொழுது பலத்த காற்று வீசியுள்ளது. இதனை தொடர்ந்து மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி நின்றது.
எனினும், கப்பலில் எந்த கசிவும் ஏற்படவில்லை. இதனால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதன்பின்னர் இன்று காலை கப்பல் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.