அமெரிக்க கடற்படை அதிகாரி தைவானுக்கு திடீர் பயணம்?
அமெரிக்க கடற்படை அதிகாரி, முன் அறிவிப்பு இன்றி தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன்,
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா கூறி வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்க கடற்படையின் அட்மிரல் அதிகாரி ஒருவர் தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நட்சத்திர அந்தஸ்து கொண்ட பொறுப்பு வகிக்கும் அந்த அதிகாரி ஆசிய பசுபிக் பிராந்திய பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் உளவுபிரிவையும் மேற்பார்வை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. உயர் அந்தஸ்து கொண்ட அமெரிக்க அதிகாரியின் தைவான் பயணம் சீனாவுக்கு கடும் எரிச்சலை கொடுத்துள்ளது.
அமெரிக்க அதிகாரி வருகை தந்ததை தைவான் அரசு உறுதிப்படுத்தியது. அதிகாரியின் பற்றிய விவரத்தை வெளியிடவில்லை. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்விவகாரம் குறித்து கூற மறுத்துவிட்டது.