அபுதாபியில் அமீரக பிரதமருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அபுதாபி,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமை, அமீரக தலைநகர் அபுதாபியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் அமீரகத்தில் வாழும் இந்தியர்களை சிறப்பாக பராமரித்து வருவதற்காக அமீரக பிரதமருக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார். அத்துடன் இந்த கொரோனா நெருக்கடியில் அமீரகத்தின் நம்பகமான பங்காளியாக இந்தியா விளங்கி வருவதையும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
அமீரக பிரதமருக்கு, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதம் ஒன்றையும் இந்த சந்திப்பின்போது ஜெய்சங்கர் ஷேக் முகமதுவிடம் வழங்கினார். இந்த தகவல்களை ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.