காங்கோ குடியரசில் 3 மாதங்களுக்கு பின் எபோலா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு
காங்கோ குடியரசில் 3 மாதங்களுக்கு பின் எபோலா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
புடெம்போ,
ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா வைரசின் பாதிப்புகள் மீண்டும் கண்டறியப்பட்டு உள்ளன.
மத்திய ஆப்பிரிக்க நாடான ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் கடந்த ஆண்டு எபோலா வைரசின் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. எனினும், நவம்பர் 18ந்தேதியுடன் 11வது எபோலா பாதிப்புகள் முடிவுக்கு வந்துள்ளன என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இதனால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். வன விலங்குகளால் பரவும் இந்த வைரசானது, சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால் உயிரிழப்பும் ஏற்படுத்தும்.
இந்நிலையில், கடந்த 1ந்தேதி விவசாயி ஒருவரின் மனைவி காய்ச்சலில் இருந்து விடுபட்ட பின்னர், எபோலா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் 2 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்து விட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் எபோலா வைரசின் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.