ஓமன் மன்னருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் பேசினார்.

Update: 2021-02-19 01:20 GMT

மஸ்கட்,

ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் பேசினார். அப்போது பேசிய ஓமன் மன்னர், இந்திய அரசு ஓமன் நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பியதற்காக நன்றி தெரிவித்தார். கொரோனா பாதிப்பை தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அப்போது வலியுறுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஓமன் மன்னர் தனது பதவி பொறுப்பில் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் ஓமன் திட்டம் 2040-ஐ அடைய சிறந்த முறையில் செயல்பட்டு வருவதற்கு வாழ்த்து கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து சிறப்பான ஒத்துழைப்பு இருந்து வருவதற்கு இரு தலைவர்களும் பெருமிதம் தெரிவித்தனர். ஓமன் நாட்டில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் பொருளாதாரம் மற்றும் கலாசார வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்