இத்தாலியில் பழமையான தேர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

இத்தாலியில் உள்ள பாம்பெய் நகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பழமையான தேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-03 20:10 GMT
ரோம்,

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த பாம்பெய் நகரத்தில் மவுண்ட் வெசுவியஸ் என்ற எரிமலை உள்ளது. இந்த வெசுவியஸ் எரிமலையில் கி.பி 79-ம் வருடம் மலையில் ஓர் சீற்றம் ஏற்பட்டது. அந்த எரிமலை வெடிப்பு, பாம்பெய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடிவிட்டது. 

அது அங்கு வாழ்ந்த மனிதர்கள் மற்றும் கட்டிடங்களின் தொல்லியல் எச்சங்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌

4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தேரை திருவிழாக் காலங்கள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த தேர் சிதையாமல், மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் தேரில் இரும்புக் கூறுகள், அழகான பித்தளை மற்றும் டின் உலோக வேலைப்பாடுகள், கயிறுகள், மலர் அலங்காரங்கள் என பலதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 7-ந் தேதி இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அதை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர பல வார காலம் ஆனது என அகழ்வாய்வாளர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்