காருக்குள் பிணமாக கிடந்த 4 வயது சிறுமி பெற்றோர் கவனக்குறைவால் உயிரிழந்த பரிதாபம்

துபாயில் பெற்றோர் கவனக்குறைவால் காருக்குள் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-03-03 22:09 GMT

துபாய்,

துபாய் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் அனைவரும் காரில் தங்களது வீட்டின் அருகில் உள்ள வணிக வளாகத்துக்கு பொருட்கள் வாங்க சென்றனர். அந்த காரில் தந்தை, தாய் மற்றும் 4 குழந்தைகள் சென்றனர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினர்.

கார் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், தந்தை மிகவும் களைப்பாக இருந்ததால் அவர் நேராக தனது படுக்கையறைக்கு சென்று தூங்க சென்றார். குழந்தையின் தாயார் மற்றும் 3 குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றனர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் காரில் இருந்து இறங்காமல் அயர்ந்து தூங்கி விட்டது. பெற்றோர் காரில் குழந்தை இருப்பதை கவனிக்காமல் கார் கதவை மூடி விட்டு சென்று விட்டனர்.

சிறிது நேரம் கடந்ததும் ஒரு குழந்தையை மட்டும் காணாமல் தாயார் தேடினார். தொடர்ந்து அவர் கார் கதவை திறந்து பார்த்தார். அங்கு காரின் இருக்கையில் 4 வயது மகள் அசைவற்ற நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து துபாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்