ஈராக்கில் வான்தாக்குதல்: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக்கில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Update: 2021-03-05 00:24 GMT

பாக்தாத்,

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் அவர்களை உள்நாட்டு படைகள் கடந்த 2017-ம் ஆண்டின் இறுதியில் வீழ்த்தின.

இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து நகர்ப்புறங்களிலும், பாலைவனப்பகுதிகளிலும், கரடு முரடான பகுதிகளிலும் பதுங்கி உள்ளனர். அவர்கள் அவ்வப்போது வெளியே வந்து பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் எதிராக கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருவது அந்த நாட்டுக்கு பெருத்த தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்தநிலையில் அங்கு தலைநகர் பாக்தாத்தில் இருந்து 135 கி.மீ. வட கிழக்கில், தியாலா மாகாணத்தின் ஜலாவ்லா நகரத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினரின் சார்பில் வான்தாக்குதல் நடத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் நிர்மூலமாக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்