‘‘முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம்’’ ஐ.நா.வில் கமலா ஹாரிஸ் உரை

‘‘முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம்’’ ஐ.நா.வில் கமலா ஹாரிஸ் உரை.

Update: 2021-03-17 20:18 GMT
நியூயார்க், 

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றிருக்கிறார்.இதன் மூலம் துணை ஜனாதிபதி பதவியை வகிக்கும் முதல் பெண், முதல் கருப்பின அமெரிக்கர், முதல் தெற்காசிய அமெரிக்கர், முதல் இந்திய வம்சாவளி, முதல் தமிழ் வம்சாவளி என பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.இந்த நிலையில் பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

இன்று ஜனநாயகம் அதிக அளவில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருவதை நாம் அறிவோம். தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஒரு சிக்கலான சரிவைக் கண்டுள்ளன. ஜனநாயகத்தின் நிலை அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் பொறுத்து அமைகிறது. முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடு உள்ள ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது. பெண்களின் பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது. இது எல்லா இடங்களிலும் உண்மை.

ஆனால் பெண்கள் தரமான சுகாதாரத்தை பெறுவதில் தடைகளை எதிர்கொள்ளும் போது உணவு பாதுகாப்பின்மை எதிர்கொள்ளும்போது வறுமையில் வாழ அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் காலநிலை மாற்றத்தால் விகிதாச்சாரமாக பாதிக்கப்படுவது, பாலின அடிப்படையிலான வன்முறையில் மிகவும் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் பெண்கள் முடிவெடுப்பதில் முழுமையாக பங்கேற்பது கடினம். இதன் விளைவாக ஜனநாயகங்கள் செழிக்கப்படுவது மிகவும் கடினமானது.

இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

மேலும் செய்திகள்