டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கம்: தனக்கென சொந்த சமூக வலைத்தளத்தை உருவாக்கும் டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

Update: 2021-03-22 17:28 GMT

இந்தநிலையில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வி அடைந்த நிலையில் எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.‌

இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கின.

இந்தநிலையில் டிரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘டிரம்ப் 2 அல்லது 3 மாதங்களில் சமூக ஊடகங்களுக்கு திரும்புவதை நாம் காணப்போகிறோம். அவர் தனக்கென சொந்த வலைதளத்தை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எண்ணற்ற நிறுவனங்கள் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. டிரம்ப் உருவாக்கும் இந்த வலைத்தளம் மிகப்பெரியதாக இருக்கும். அது பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும்’’ என கூறினார்.

 

மேலும் செய்திகள்