தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை- ஆய்வில் தகவல்
தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
கலிபோர்னியா
2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டறியபட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் 13 கோடியே 88 ஆயிரத்து 20 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 42 லட்சத்து 30 ஆயிரத்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 11 கோடியே 16 லட்சத்து 5 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 29 லட்சத்து 84 ஆயிரத்து 901 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மருத்துவ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் இது தொடர்பாக 50,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளோம். இதில் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை. மேலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறிகளுடன் குணமடைந்துள்ளனர். இறப்பும் ஏற்படவில்லை.
உடற்பயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம். உடல் அசைவுகள் இருக்கும் போதுதான் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நுரையீரல் செயல்பாடு சரியாக இருந்தால் கொரோனா வைரஸால் நுரையீரலில் தாக்குதல் ஏற்படுவது குறையும். நுரையீரலில் இருந்து கிருமிகள் வெளியேறும். அதனால், ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சிகளையும் கைவிடாதீர்கள் என கூறப்பட்டு உள்ளது.