கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதித்தது கனடா
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்கள் தடை விதித்துள்ளது.
ஒட்டவா,
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவி மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு மட்டும் 3 லட்சத்தை கடந்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு பயணிகள் விமானங்கள் கனடா வருவதற்கு 30 நாட்கள் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களில், பயணிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது அதிகரித்து வருவதால் இந்த தடை விதிக்கப்படுவதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து வணிக மற்றும் தனி விமானங்களுக்கும் இந்த 30 நாள் தடை பொருந்தும் எனினும் சரக்கு விமானங்களுக்கு தடை நடவடிக்கை பொருந்தாது எனவும் கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.