பிரேசிலில் 4 லட்சத்தை கடந்தது கொரோனா பலி
பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.
பிரேசிலியா,
தென் அமெரிக்க நாடான பிரேசில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக அங்கு கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தினந்தோறும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 3,001 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,01,186 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் அங்கு 69,389 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,90,678 ஆக உயர்ந்துள்ளது.