எச்சரிக்கைகளை புறக்கணித்தது, கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு மீது லான்செட் விமர்சனம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் மோடி அரசு கொரோனாவை சரிவர கையாளவில்லை என புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான 'தி லான்செட்' விமர்சித்துள்ளது. இது தொடர்பாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது. இந்தியாவில் 21 சதவீதம் பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய செரோ ஆய்வு காட்டியது.
ஆனாலும் இந்தியா கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தி விட்டது என்ற பிம்பத்தை மத்திய அரசு காட்டியது. அதிவேகமாக பரவக்கூடிய நிகழ்ச்சிகள் (superspreader events) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த போதும் கூட மத திருவிழாக்கள் நடைபெற அரசு அனுமதி அளித்தது.
அரசியல் கூட்டங்களும் பெரிய அளவில் நடைபெற்றன.
மார்ச் மாதத்தில் கொரோனா 2-வது அலை ஏற்படும் முன்பாகவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இந்தியா, கொரோனா பெருந்தொற்று பரவல் முடிவு பெறும் இறுதி கட்டத்தில் (endgame) இருப்பதாக கூறினார். மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது என்பன போன்ற தவறான பரிந்துரைகளால் போதிய தயார்நிலை ஏற்படுத்தப்படவில்லை. தடுப்பூசி திட்டமும் துரிதமாக நடைபெறவில்லை. மக்கள்தொகையில் 2% க்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா 2-வது அலை பற்றிய பல எச்சரிக்கைகளை மத்திய அரசு அலட்சியம் செய்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பரிந்துரைகளையும் லான்செட் இதழ் தெரிவித்துள்ளது. அதில், தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அனைத்து உரிய வேகத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் நகர்ப்புறத்தில் மட்டுமல்ல, 65% க்கும் அதிகமான மக்கள் (அதற்கு மேற்பட்டவர்கள்) அல்லது 800 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கிராமப்புற மற்றும் ஏழை குடிமக்களிடம் தடுப்பூசி பிரச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும்” எனக்கூறப்பட்டுள்ளது.