காபூலில் மசூதியில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி; இமாம் படுகாயம்
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். இமாம் படுகாயம் அடைந்துள்ளார்.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் வடக்கே ஷகர் தாரா மாவட்டத்தில் ஹாஜி பக்ஷி மசூதியில் வெள்ளி கிழமை இறை வணக்கம் இன்று மதியம் நடந்து கொண்டிருந்தது. இதில் எண்ணற்றோர் திரண்டு இருந்தனர்.
இதனிடையே மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் மசூதியின் இமாமும் ஒருவர் என பெயர் வெளியிட விருப்பமில்லாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எனினும், மசூதியின் உள்ளே வைத்த குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் சில வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.