சிரியா அதிபர் தேர்தலில் பஷார் அல் அசாத் வெற்றி - ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வாழ்த்து

சிரியா அதிபர் தேர்த்லில் வெற்றி பெற்றுள்ள பஷார் அல் அசாத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-29 01:08 GMT
டமாஸ்கஸ்,

கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.  இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பஷார் அல் அசாத் மீண்டும் வெற்றி பெற்று அதிபர் பதவியை ஆசாத் தக்க வைத்தார். தொடர்ந்து 4-வது முறையாக சிரிய அதிபராக பஷார் அல் அசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சிரியா அதிபர் ஆசாத், அவரது தந்தையின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் அதிபரானார். அதன் பிறகு நடைபெற்ற அனைத்து அதிபர் தேர்தல்களிலும் ஆசாத் வெற்றி பெற்றுள்ளார்.

இருப்பினும், இந்தத் தேர்தல் வெறும் கண் துடைப்பிற்கு நடத்தப்படும் தேர்தல் என்றும் ஆசாத் அதிபர் பதவியில் இருக்கும் வரை தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்றும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சிரிய அதிபர் தேர்த்லில் வெற்றி பெற்றுள்ள பஷார் அல் அசாத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிரிய மக்கள் சிரியாவின் தலைவிதியையும் செழிப்பையும் தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளனர்” என்று ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்