உகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக கருதவில்லை: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
உகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்ற கூற்றை தான் நம்பவில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. இந்த வைரசின் அடுத்தடுத்த அலைகளால் இன்றளவும் உலக நாடுகள் திணறி வருகின்றன.
சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.
கொரோனா வைரசின் மூலத்தை 90 நாட்களில் கண்டறிய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவும் நிலையில், உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியதாக கருதவில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்
தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அவர், விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது என்றார். இருப்பினும், இது தொடர்பான மற்ற நாடுகளின் கருத்துகளையும் கவனிக்க வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.