அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஜோ பைடன்
அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸ்,
பிரசல்சில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:- அமெரிக்கர்கள் முடிந்த வரை விரைவாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு 6 லட்சம் பேரை நாம் இழந்து இருக்கிறோம். நாட்டின் பெரும்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளும் வேகமாக திரும்பி வருகின்றன. கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் வேகமாக சரிந்து வருகிறது.
எனினும், கொரோனா பாதிப்புக்கு பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நம்மிடம் பெருமளவு தடுப்பூசிகள் உள்ளன. கொரோனா வைரசை வீழ்த்த நாம் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு கவசத்தை கைவிடுவதற்கான தருணம் இதுவல்ல” என்றார்.