ஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் இந்தியா புறக்கணிப்பு ஆசியான் முயற்சிக்கு ஆதரவு

மியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது என ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறினார்.

Update: 2021-06-19 08:42 GMT
நியூயார்க்,

ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்தது.

கடந்த பிப்ரவரியில் நடந்த அரசாட்சி கவிழ்ப்பு மற்றும் ராணுவ ஆட்சி அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை ஒடுக்க ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  பல்வேறு அடக்குமுறைகளையும் மேற்கொண்டனர்.  இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.  ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா.வுக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்ஜனர் ஐ.நா. பொது சபையில் பேசும் பொழுது, மியான்மரில் வழக்கம்போல் இயல்பு வாழ்க்கை எதுவும் நடைபெறவில்லை.  படுகொலைகள் தொடர்கின்றன.  கடந்த பிப்ரவரியில் இருந்து போராட்டக்காரர்கள் மற்றும் வழிபோக்கர்கள் என பொதுமக்களில் 900 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், மியான்மரில்  நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐ.நாசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள்  வாக்களித்தன. பெலாரஸ் மட்டும் எதிராக வாக்களித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான இந்தியா, வங்காளதேசம் மற்றும் பூடான், நேபாளம், சீனா,லாவோஸ், தாய்லாந்து, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் புறக்கணித்தன.

இது தொடர்பாக ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறியதாவது: -

மியான்மரின் அண்டை மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமல், அவசர கதியில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது, தற்போதைய சூழ்நிலைக்கு உதவாது. மேலும், மியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது என்று  அவர் கூறினார்.

மேலும் செய்திகள்