நிரவ் மோடியின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது இங்கிலாந்து ஐகோர்ட்

, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மறைவாக இருந்த நீரவ் மோடியை, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-23 17:00 GMT
லண்டன்,

வைர வியாபாரியான நீரவ் மோடி, கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும், தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்திய அரசின் தொடர் நெருக்கடியால், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மறைவாக இருந்த நீரவ் மோடியை, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். அதன் பின் அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் அமலாக்கத் துறையும் சிபிஐயும் ஈடுபட்டது. இதற்காக அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.   நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து  உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல் ஏப்ரல் 15 ஆம் தேதி அனுமதி அளித்தார். 

இந்த நிலையில்,    நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி பிரிட்டன் ஐகோர்ட்டில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. எனினும், வாய்மொழியாக நிரவ் மோடியின் வழக்கறிஞர்கள் இதே கோரிக்கையை ஐகோர்ட்டில் வைக்கலாம். எனினும், இங்கிலாந்து ஐகோர்ட்டின் உத்தரவு  நிரவ் மோடிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்