மெக்சிகோவில் கஞ்சாவை பயிரிடுவதும், பயன்படுத்துவதும் இனி குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்டு
மெக்சிகோவில் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. அதேசமயம் ஒரு நபர் 5 கிராமுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி கிடையாது.
அதேபோல் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதும், அதை பயிரிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இந்த சூழலில் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் மசோதா ஒன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேறியது. ஆனால் மேலவையில் அந்த மசோதாவை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு இளைஞர்கள் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதும், சொந்த தேவைக்காக குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பயிரிடுவதும் குற்றம் அல்ல எனக்கூறி பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. கஞ்சா மீதான தற்போதைய தடை அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் இன்று சுதந்திரத்துக்கான வரலாற்று நாள் என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி மெக்சிகோவில் இனி ஒவ்வொரு நபரும் 28 கிராம் கஞ்சாவை கையிருப்பு வைத்துக்கொள்ளலாம், அதேபோல் தங்களின் தேவைக்காக வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். அதேசமயம் பொது வெளியிலும் குழந்தைகள் முன்பும் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.