“விமான விபத்துக்கு காரணம் பயங்கரவாத தாக்குதல் அல்ல” - பிலிப்பைன்ஸ் ராணுவம் விளக்கம்

பிலிப்பைன்ஸ் விமான விபத்து பயங்கரவாத தாக்குதலால் ஏற்படவில்லை என கர்னல் எட்கார்ட் அரிவலோ தெளிவுபடுத்தியுள்ளார்.

Update: 2021-07-04 08:37 GMT
மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 85-பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறியுள்ளார். 

இதுவரை 15 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை உயிருடன் மீட்டு விடலாம் என்ற பிரார்த்தனையுடன் முழு வீச்சில் மீட்பு பணியில், மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ அடிப்படை பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பட்டம் பெற்றவர்கள் என்றும் பயங்கரவாத தடுப்பு பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரான கர்னல் எட்கார்ட் அரிவலோ கூறுகையில், இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலால் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதய சுழலில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது தான் முதல் பணியாக உள்ளது என்றும் விபத்திற்கான காரணம் குறித்த விரிவான விசாரணை விரைவில் துவங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்