துபாயில் உள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தில் இங்கிலாந்து கடற்படை வீரர்கள் பயிற்சி

துபாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தில் இங்கிலாந்து நாட்டின் கடற்படை வீரர்கள் ஆழம் வரை சென்று பயிற்சி செய்தனர்.

Update: 2021-07-30 01:00 GMT
ஆழமான நீச்சல் குளம்
துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது. இந்த நீச்சல் குளம் மொத்தம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது ஆகும்.ஒலிம்பிக் நீச்சல் குளத்தை போன்று சுமார் 6 மடங்கு அளவுள்ள இந்த ஆழமான நீச்சல் குளத்தில் ஹைப்பர் பேரிக் என்ற பகுதி உள்ளது. இதில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். நீச்சல் குளத்தில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங்களுடன் பழைய பணிமனை போன்ற அமைப்பு பங்கேற்பாளர்களை வெகுவாக 
கவருவதாக உள்ளது.

இங்கிலாந்து கடற்படை வீரர்கள்
‘ஸ்கூபா டைவ்’ எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து நாட்டின் கடற்படையின் டைவிங் வீரர்கள் குழு தலைவர் லியாம் புல்மேன் மற்றும் டைவிங் அதிகாரி கல்லும் கிளார்க் ஆகியோர் ஆழமான நீச்சல் குளத்திற்கு வருகை புரிந்தனர். துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெச்.எம்.எஸ். ஷோர்ஹம் என்ற இங்கிலாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இவர்கள் வந்தனர்.4 நாட்கள் ஜெபல் அலி துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்த கப்பலில் மொத்தம் 40 கடற்படை வீரர்கள் உள்ளனர். துபாயில் ஆழமான நீச்சல் குளம் திறக்கப்பட்டது பற்றி அறிந்த லியாம் புல்மேன் மற்றும் கல்லும் கிளார்க் ஆகியோர் தாங்கள் பயிற்சி பெற்று பார்ப்பதற்காக அங்கு சென்றனர்.

புதிய அனுபவத்தை தரும்
அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் அளிக்கப்பட்டு நீச்சல் குளத்தின் அடியில் ஆழமான பகுதி வரை சென்று வந்தனர்.பிறகு தாங்கள் கொண்டு வந்த இங்கிலாந்து நாட்டின் ராயல் கடற்படையின் கொடியை பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.ஆழமான பகுதியில் இருவரும் செஸ் விளையாட்டில் ஈடுபட்டனர். இந்த நீச்சல் குளம் டைவிங் வீரர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என இருவரும் உற்சாகமாக கூறினர்.தொடர்ந்து பொதுமக்கள் பலரும் இந்த நீச்சல் குளத்திற்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் செய்திகள்