ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்தியது உலக வங்கி
ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதி உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது.
வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானை தனிமைபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்திக்கொள்வதாக உலக வங்கி இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, உலக வங்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதி உதவியை உலக வங்கி நிறுத்திக்கொள்கிறது. தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அங்குள்ள நிலைமை குறிப்பாக பெண்களின் முன்னேற்றம் குறித்து மிகுந்த கவலைகொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.