நூறாண்டுகளில் இல்லாத பெருந்தொற்றை உலகம் சந்தித்து உள்ளது; பிரதமர் மோடி உரை
நூறாண்டுகளில் இல்லாத வகையில், ஒட்டு மொத்த உலகமும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெருந்தொற்று துயரை சந்தித்து உள்ளது என ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
நியூயார்க்,
பிரதமர் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டலில் இருந்து இன்று மாலை புறப்பட்டு சென்றார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்திய வம்சாவளியினர் ஓட்டலுக்கு வெளியே திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமரை கண்டதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன்பின் பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபையின் தலைமையகத்திற்கு சென்றார். அவர் ஐ.நா.வின் 76வது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
இந்த கூட்டத்தொடரில் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷிரிங்லா மற்றும் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். சந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒட்டு மொத்த உலகமும் நூறாண்டுகளில் இல்லாத வகையில், பெருந்தொற்று துயரை சந்தித்து உள்ளது. இந்த கொடிய பெருந்தொற்றுக்கு உயிரிழந்தோருக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.