இந்தியாவின் பன்முக தன்மையே வலிமையான ஜனநாயகத்திற்கான அடையாளம்; பிரதமர் மோடி உரை

இந்தியாவின் பன்முக தன்மையே வலிமையான ஜனநாயகத்திற்கான அடையாளம் என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.

Update: 2021-09-25 13:40 GMT

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் உரையாற்றுவதற்காக தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பிரதமர் மோடி இன்று மாலை புறப்பட்டு சென்றார்.  அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்திய வம்சாவளியினர் ஓட்டலுக்கு வெளியே திரண்டிருந்தனர்.  அவர்கள் பிரதமரை கண்டதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  அவர்களுக்கு பிரதமர் மோடி கையசைத்து பதிலுக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன்பின் பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபையின் தலைமையகத்திற்கு சென்றார்.  அவர் ஐ.நா.வின் 76வது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

இந்த கூட்டத்தொடரில் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷிரிங்லா மற்றும் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். சந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒட்டு மொத்த உலகமும் நூறாண்டுகளில் இல்லாத வகையில், பெருந்தொற்று துயரை சந்தித்து உள்ளது.  இந்த கொடிய பெருந்தொற்றுக்கு உயிரிழந்தோருக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.  அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, இந்த ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதியில் இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.  இந்தியாவின் பன்முக தன்மையே வலிமையான ஜனநாயகத்திற்கான அடையாளம் என அவர் கூறியுள்ளார்.  வளர்ச்சியானது அனைத்தும் உள்ளடக்கிய, உலகம் முழுவதற்கும் உரிய மற்றும் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்