ராணுவ தலைமை தளபதி நரவனே இலங்கையில் 5 நாள் சுற்றுப்பயணம்

5 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள ராணுவ தலைமை தளபதி நரவனே, அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

Update: 2021-10-12 22:45 GMT
கொழும்பு,

இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே, பதவி ஏற்றபிறகு முதல்முறையாக இலங்கைக்கு நேற்று சென்றார். இந்த 5 நாள் பயணத்தில் நரவனே, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, முப்படை தலைமை தளபதிகளை சந்தித்துப் பேசுவார்.

இந்தியா-இலங்கை இடையிலான சிறப்பான பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும்வகையில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் நரவனே பேச்சு நடத்துவார், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்த கருத்துகளை பகிர்ந்துகொள்வார் என அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவ தலைமையகம், கஜாபா படைப்பிரிவு தலைமையகம், இலங்கை ராணுவ அகாடமி ஆகியவற்றுக்கும் நரவனே சென்று பார்வையிடுவார். இந்தியா-இலங்கையின் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி’யின் நிறைவுக்கட்டத்தை நேரில் பார்க்கும் நரவனே, பதலந்தாவில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி வீரர்கள் மத்தியில் பேசுகிறார். வருகிற 16-ந் தேதி அவர் இலங்கை பயணத்தை முடித்துகொண்டு இந்தியா திரும்புகிறார்.

மேலும் செய்திகள்