நிலநடுக்கத்தை கண்டு அசராத நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தலைநகர் வெலிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் அரசின் இலக்கு குறித்தும் விளக்கமளித்து கொண்டார். பிரதமர் ஜெசிந்தாவின் இந்த பேட்டி நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

Update: 2021-10-22 18:32 GMT
அப்போது அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்த கட்டிடம் பலமாக குலுங்கியது. அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த பிரதமர் ஜெசிந்தா சற்று தடுமாறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இருந்த போதிலும் அவர் தனது பேட்டியை நிறுத்தாமல் தொடர்ந்தார். புன்னகை செய்தபடியே பத்திரிகையாளர்களை பார்த்து, “மன்னிக்கவும் சிறிய கவனச்சிதறல். உங்கள் கேள்வியை மீண்டும் கேட்கிறீர்களா” என வினாவினார்.

இதனால் பத்திரிகையாளர்களும் பதற்றத்தை மறந்து தங்களின் கேள்வியை தொடர்ந்தனர். இதன் மூலம் நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் எந்தவித இடையூறும் இன்றி பேட்டி நடந்து முடிந்தது.

முன்னதாக நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரை மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதில் தலைநகர் வெலிங்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் பயங்கரமாக குலுங்கியதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை.

மேலும் செய்திகள்