“ஒரே நாடு ஒரே சட்டம்” சட்ட வரைவு தயாரிக்க குழு அமைத்தது இலங்கை அரசு
ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாரிக்கும் குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை.
கொழும்பு,
இலங்கையில் தற்போது அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தனது தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் கொண்டு வரப்படும் என்று சூளுரைத்தார். 2019- ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோத்தபய ராஜபக்சே முனைப்பு காட்டி வருகிறார்.
அந்த வகையில், சட்டத்திறகான வரைவு தயாரிக்க 13- பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்தக்குழுவின் தலைவராக புத்த மதத் துறவி ஞானசேரா சாரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் ஞானசேரா சாரர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
13 பேர் கொண்ட குழுவில் முஸ்லீம்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை. 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என வரைவு குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.