பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.

Update: 2021-11-24 20:23 GMT
கோப்புப்படம்
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகர் பெஷாவர் நகரில் உள்ள ஹயாதாபாத் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் போலீசார் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதை தொடர்ந்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்