அச்சுறுத்தும் ‘ஒமிக்ரான்’ வைரஸ்: பல நாடுகளில் பரவ தொடங்கியது..!!

சர்வதேச அளவில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-11-30 02:33 GMT
லண்டன், 

தென்ஆப்பிரிக்காவில் உருவான ‘ஒமிக்ரான்’ என்ற புதியவகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது.

இந்த கொரோனா, இங்கிலாந்தில் ஏற்கனவே செம்ஸ்போர்டு, நாட்டிங்ஹாம் ஆகிய நகரங்களில் தலா ஒருவருக்கு தாக்கி இருந்தது. இந்தநிலையில், மூன்றாவதாக ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தென்ஆப்பிரிக்காவில் சில நாட்கள் இருந்து விட்டு இங்கிலாந்துக்கு திரும்பியவுடன் ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நடமாடிய இடங்களில் தொற்று பரவி இருக்கும் அபாயம் இருப்பதால், அந்த இடங்களில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

இதுபோல், ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு ‘ஒமிக்ரான்’ தாக்கி இருப்பதாக ஸ்காட்லாந்து அரசு கூறியுள்ளது. இதனால், இங்கிலாந்தில் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளை தவிர, மற்ற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று இங்கிலாந்து சுகாதார மந்திரி சஜித் ஜாவீத் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 8 பேருக்கு ‘ஒமிக்ரான்’ தாக்கி இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 14 நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அவர்களும் அடங்குவர். அவர்களுக்கு ஆல்பா, டெல்டா, பீட்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் இல்லை. எனவே, ‘ஒமிக்ரான்’ தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றிய பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்த 2 பேருக்கு ஏற்கனவே ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில், தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த 30 வயது வாலிபருக்கு ‘ஒமிக்ரான்’ தாக்கியுள்ளது. இதையடுத்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவதற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

நெதர்லாந்தில் 13 பேருக்கு ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டது. கனடாவில் 2 பேருக்கு நோய் தாக்கி உள்ளது. ஹாங்காங், ஐரோப்பா, வடஅமெரிக்கா என பல நாடுகளிலும் கால் பாதித்துள்ளது.

இப்படி பல நாடுகளில் ‘ஒமிக்ரான்’ பரவி வருவதால், அந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. வெளிநாட்டினர் வருகைக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. மொராக்கோவில் 2 வாரங்களுக்கு விமானங்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு ஜப்பான் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கை அறிவித்துள்ளது. அத்துடன், எல்லைகளை மூடுவது பற்றி பரிசீலித்து வருவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார்.

அனைத்து வெளிநாட்டு விமானங்கள் வருகைக்கு மொராக்கோ தடை விதித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பட்டியலை வைத்து அவர்களை இத்தாலி தேடி வருகிறது. இதுபோல், தென்ஆப்பிரிக்கா மற்றும் இதர 7 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவதற்கு அமெரிக்கா நேற்று தடை விதித்தது.

இத்தகைய பயண தடைகளுக்கு தென்ஆப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய உருமாறிய வைரசை வேகமாக கண்டுபிடித்ததற்கு தங்களை தண்டிப்பதா? என்று கேட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவன இயக்குனர் பிரான்சிஸ் காலின்ஸ், ‘ஒமிக்ரான்’ வைரஸ் மற்ற உருமாறிய கொரோனாக்களை விட ஆபத்தானதாக இருக்கும் என்று தான் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

அதே சமயத்தில், ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘உருமாறும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாத தன்மை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, எதிர்காலத்தில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.

இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். நிச்சயமற்ற நிலை நீடித்தாலும், தற்போதைய தடுப்பூசிகள் ஓரளவுக்கு பாதுகாப்பானவை’’ என்று கூறப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு கால்பந்து அணியில் 13 பேருக்கு ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

13 பேரில் ஒருவர் சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று வந்தார். மற்றவர்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றது இல்லை. எனவே, தென்ஆப்பிரிக்கா தொடர்பு இல்லாமல் பரவிய முதல் சம்பவமாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்