காதல் ஈகோ : காதலனை பேச வைக்க போலி திருமணம் செய்த இளம்பெண் ...! நடந்தது என்ன...?

முன்னாள் காதலன் தன்னுடன் மீண்டும் பேச வேண்டும் என்பதற்காக இளம்பெண் போலியாக திருமணம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2021-12-01 06:47 GMT
பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினை சேர்ந்தவர் ஜாக்குலின். இவர் ஜாக் (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஆனால், தனது முன்னாள் காதலனுடன் மீண்டும் பேச வேண்டும் என விரும்பிய ஜாக்குலின் விபரீதமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தான் முதலில் பேசக்கூடாது... முன்னாள் காதலனே முதலில் தன்னிடம் வந்து பேச வேண்டும் என விரும்பிய ஜாக்குலின், ஜாக்கை வெறுப்பேற்றி அதன் மூலம் அவரை பேசவைத்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்.

தனது முன்னாள் காதலனை வெறுப்பேற்றி பேச வைக்க ஜாக்குலின் எடுத்த முயற்சி அனைவரையும் தலைசுற்றவைத்துள்ளது. ஜாக்குலின் தனக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகிவிட்டது என்பது போன்று புகைப்படங்களை எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டால் அதை பார்த்து ஜாக் தன்னிடம் பேசிவிடுவார் என்று நினைத்துள்ளார்.

இதனையடுத்து, திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த ஜாக்குலின் புதுமணப்பெண் போல ஆடைகளை அணிந்து வந்துள்ளார். திருமண மண்டபத்தை மட்டுமின்றி மாப்பிள்ளையாக ஒருவரையும் வாடகைக்கு அழைத்து வந்துள்ளார். 

புதுமாப்பிளை போல ஆடை அணிந்த அந்த நபருடன் ஜாக்குலின் திருமணம் செய்துகொண்டது போல வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளார். தம்பதியாக இருவரும் கேக் வெட்டுவது போன்றும் திருமண நிகழ்ச்சியை கொண்டாடுவது போன்றும் போட்டோ, வீடியோ என பல கோணங்களில் எடுத்துள்ளார். 

தனக்கும் வாடகைக்கு அழைத்து வந்த ஆண் நபருக்கு நடைபெற்ற போலி திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்து விட்டு தனது முன்னாள் காதலனான ஜாக் தன்னுடன் பேசுவான் என்று ஜாக்குலின் நினைத்துள்ளார். 



ஆனால், ஜாக்குலினின் போலி திருமண விடீயோ, புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பதிவுகளில் பார்த்த முன்னாள் காதலன் ஜாக் தனது முன்னாள் காதலி ஜாக்குலினுக்கு திருமணமாகிவிட்டது என நம்பியுள்ளார். மேலும், ஜாக்குலினை அவர் தொடர்பு கொள்ளவே இல்லை. 

தனது முன்னாள் காதலன் தன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக செய்துகொண்ட போலி திருமணம் குறித்து ஜாக்குலின் தற்போது டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார். 

இது தொடபாக டிக்டாக்கில் ஜாக்குலின் வெளியிட்ட பதிவில், அவன் என்னுடன் பேசவேண்டும் என்பதற்காக நான் எனது சொந்த திருமணத்தையே போலியாக நடத்தியதை நினைத்துப்பார்க்கிறேன்’ என்று பதிவிட்டு போலி திருமணத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 

ஜாக்குலினின் இந்த போலி திருமணத்தை ஜாக் உண்மையான திருமணமாக நினைத்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் கடைசி வரை ஜாக் தனது முன்னாள் காதலியான ஜாக்குலினிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்