நாளை நடைபெற இருக்கிறது ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..!

இந்த ஆண்டிற்கான கடைசி சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது.

Update: 2021-12-03 12:21 GMT
வாஷிங்டன்

இந்த ஆண்டிற்கான கடைசி சூரிய கிரகணம் நாளை (டிசம்பர் 4-ம் தேதி) நடைபெற உள்ளது. சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருப்பதற்கு முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) என்று பெயர்.

நாளை நடைபெற உள்ள முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் மட்டுமே தெரியும். சுமார் ஒரு நிமிடம் 54 நொடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும் எனவும் அப்படி இருள் ஏற்படும்போது வானில் நட்சத்திரங்களே தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, மதியம் 12:30 மணிக்கு தொடங்கி, நான்கு மணி நேரம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பகுதி சூரிய கிரகணத்தை தென் அரைக்கோளம் பகுதிகளான தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி சூரிய கிரகணம் என்பது (Partial Solar Eclipse) சூரியன், நிலவு மற்றும் பூமி நேர்கோட்டில் இல்லாமல் இருப்பதைக் குறிக்கும்.

நாளை நடக்க இருக்கும் இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்த கிரகணம் 'ரிவர்ஸ் போலார் சோலார்' (Reverse Polar Solar) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, பூமியை நிலவு மிகவும் வேகமாக மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையில் சுற்றும். ஆனால், இந்த நிகழ்வின்போது, நிலவு கிழக்கு திசையிலிருந்து மேற்கில், சுழலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியாது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் இணையதளத்தில் நேரலையில் காண முடியும்.

மேலும் செய்திகள்