ஒமைக்ரான்லாம் என்ன... அடுத்து ஒன்று வர இருக்கு; இங்கிலாந்து விஞ்ஞானி அச்சுறுத்தல்

உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவும் ஒமைக்ரானை விட அடுத்து வரும் புதிய வகை அதிக கடுமையாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-01-08 14:16 GMT


லண்டன்,

சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது இதுவரை உலகம் முழுவதும் 30.37 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பல்வேறு வகையாக உருமாறி பாதிப்புகளை தொடர்ந்து வருகிறது.  இவற்றில் இந்தியாவில் 2வது அலையில் டெல்டா வகை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

அதில் இருந்து இந்தியா இன்னும் மீளாத சூழலில், ஒமைக்ரான் என்ற புதிய வகை பாதிப்பு பரவி வருகிறது.  பல உலக நாடுகளில் அதிவிரைவாக பரவி வரும் ஒமைக்ரான், கடுமை குறைவாக உள்ளது என கூறப்பட்டு வருகிறது.  எனினும், பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது.

சர்வதேச சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த டிசம்பர் 27ந்தேதி முதல் ஜனவரி 2ந்தேதி வரையிலான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 95 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது.  இது அதற்கு முந்தின வார பதிவை விட 71 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த சூழலில், டெல்டாவை விட ஒமைக்ரானின் வகை கடுமை குறைவு போன்று தோன்றினாலும் அதனை லேசாக எடுத்து கொள்ள கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதனுடன் ஒத்து போகும் வகையில் இங்கிலாந்து நிபுணரின் எச்சரிக்கையும் அமைந்து உள்ளது.  இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ரவீந்திர குப்தா, உத்தர பிரதேச மாநிலத்துடன் குடும்ப உறவுடையவர்.  இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் தொற்று நோய்களுக்கான பிரிவில் பேராசிரியராக இருந்து வருகிறார்.

இவர் ஒமைக்ரான் வகை பற்றி சமீபத்தில் ஆய்வு செய்து அதற்கான முடிவுகளை வெளியிட்டு உள்ளார்.  அதில், அதிகளவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட காலசூழலிலும், கொரோனா மிக திறமையாக பரவி வருகிறது.  அதனால், அது லேசாக உள்ளது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.  அதனாலேயே, இதனை ஒரு பரிணாம பிழை என நான் நினைக்கிறேன்.  இது, அடுத்து வரும் கொரோனா வகை மிக கடுமையாக இருக்கும் என்று அடையாளப்படுத்தி உள்ளது.

அடுத்து வரும் புதிய வகை, ஒமைக்ரானின் பண்புகளை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.  அதனால், இதற்கு முன்பு நாம் கண்ட கடுமையான நிலைக்கு நாம் திரும்பவும் கூடும் என்று கூறியுள்ளார்.  தடுப்பூசி செலுத்தி கொள்வது முக்கியம் வாய்ந்தது.

ஏனெனில் கொரோனாவுக்கு எதிராக, முதலில் இருக்கும் பாதுகாப்பு அரணாக அது தொடர்ந்து இருந்து வருகிறது.

ஒமைக்ரானின் பாதிப்புகள் கடுமை குறைவாக இருப்பது என்பது தற்போது நல்ல விசயம்.  ஏனென்றால், தொற்றை தடுப்பது என்பது செய்ய வேண்டியவற்றில் விரும்பத்தக்க ஒன்று.  அதனால், லேசான பாதிப்பு ஏற்படுத்தும் வகையான ஒமைக்ரான் இருக்கும் சூழலில், இதனை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

மேலும் செய்திகள்