அபுதாபி டிரோன் தாக்குதலுக்கு பதிலடி: ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல்

டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.

Update: 2022-01-18 02:45 GMT
Image Courtesy: Reuters (கோப்பு படம்)
அபுதாபி, 

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர். 

இதில், எண்ணெய் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டேங்குகள் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தானி என 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 

இந்நிலையில், அபுதாபியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளன. 

அபுதாபியில் தாக்குதல் நடத்து சில மணி நேரங்களில் இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படைகளுக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஏமனில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சென்ற ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றுள்ளனர். அந்த சரக்கு கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். 

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பிடித்துவைக்கப்பட்டுள்ள இந்தியர்களை தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்