உக்ரைனில் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

உக்ரைனில் உள்ள ஓட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.

Update: 2022-02-13 18:33 GMT
கீவ்,

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே நகரில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இருதரப்பினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

ஓட்டலில் இருந்த அனைவரும் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த நபர்கள் தொடர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்