போருக்கு நடுவே வெடிகுண்டு சத்தங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்..!

உக்ரைன் தலைநகரில் போருக்கு மத்தியில் ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Update: 2022-02-25 15:08 GMT
கிவ்,

உக்ரைனைச் சேர்ந்த ஸ்வயடோஸ்லாவ் பர்சின் (வயது 24), யரினா எரிவா (வயது 21) என்ற என்ற ஜோடி வருகிற மே மாதம் உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை அறிவித்தார். இதனால் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. 2-வது நாளாக இன்றும் உக்கிரமாக தாக்குதல் நடந்து வருகிறது.

அமைதியான நதி, அழகான விளக்குகள், உணவகத்தின் மேல்தளம் என்று அமைதியான முறையில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த பர்சின், யரினா தம்பதி தற்போது போருக்கு நடுவே வான்வழி தாக்குதல்களுக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே கிவ்வில் உள்ள ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரும் நாட்டைப் பாதுகாக்கும் முயற்சிகளில் சேர உள்ளூர் பிராந்திய பாதுகாப்பு மையத்திற்குச் செல்லத் தயாராகியுள்ளனர். எனவே தான் அவசர அவசரமாக தற்போது திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து யரினா, நிச்சயம் ஒருநாள் தாக்குதலின் பயத்திலிருந்து விடுபட்டு எங்கள் திருமணத்தை கொண்டாட முடியும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்