இந்திய மாணவர்களுக்காக போலாந்தில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் - இந்தியாவுக்கான போலாந்து தூதர்
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுக்கான போலாந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி பேசினார்.
புதுடெல்லி,
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுக்கான போலாந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைனிலிருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் போலாந்து எல்லையை வந்தடைந்துள்ளனர். அவர்களில் இந்திய மணவர்களும் அடங்குவர்.
போலாந்து எல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் பரந்த இதயத்துடன் போலாந்து வரவேற்று கொண்டிருக்கிறது.
இந்திய மாணவர்கள் பத்திரமாக தாயகம் திருப்புவதற்காக போலாந்தில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.
இந்திய அரசின் மீட்பு நடவடிக்கைக்கு, போலாந்து அரசு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இந்தியர்கள் விசா இல்லாமல் போலாந்து நாட்டுக்குள் நுழையலாம்.
நாங்கள் உக்ரைனுக்கு துணை நிற்கிறோம்; ஆதரவாக உள்ளோம். உக்ரைனுக்கு தேவைப்படும் அனைத்து வகையான உதவிகளையும் அளித்து வருகிறோம்.
ரஷிய விமானங்கள் பறப்பதற்கு, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வழித்தடமும் தடை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வழித்தடத்தில் ரஷியாவை சேர்ந்த தனியார் விமானங்களும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், அமெரிக்கா, மேலும் பல நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.